மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றபோதிலும், ரீ-20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர்-12 சுற்றோடு இலங்கை அணி வெளியேறியுள்ளது.
ரீ-20 உலகக் கிண்ணம் -2021 இற்கான சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுஇலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சரித் அசலங்க 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பெதும் நிசங்க 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் என்ரு ரசல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹட்மயர் ஆட்டமிழக்காது 81 அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் வனிந்து அசரங்க, பினுர மற்றும் கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய, சூப்பர் 12 சுற்றில் தான் கலந்து கொண்ட 5 போட்டிகளில் 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
குழு-1 இல் இங்கிலாந்து அணி பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாடிய 4 போட்டிகளில் தலா மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று முறையே 2, 3வது இடங்களில் உள்ளன.
இந்நிலையில் எஞ்சிய போட்டிகளின் முடிவுகளை பொறுத்து அரையிறுதிக்கான அணிகள் தெரிவாக உள்ளன.
இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பெற்றுள்ள போதும் அரையிறுதி வாய்ப்பினை இழந்து சூப்பர்-12 சுற்றோடு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை